சித்தர்களின் நிலையாமை பாடல்கள் சாயலில் ஒரு புதுக்கவிதை
காற்றில் கரைந்துபோகும்
கண்காணா ஆவிக்கு ,
சோற்றுப் பொதிதான்
கூண்டாவது ஏனோ ?
நெருப்பு ,விறகோடு
நாறும் உடல் தின்ன ,
பருத்த உடலை
வளர்த்தது ஏனோ ?
ஆறடி தன்னில்
அடங்கிவிடும் அற்பத்திற்கு ,
நூறுகொடி பறக்கும்
மதில் கோட்டை ஏனோ ?
நிரந்தரமாய் உறங்கிவிடும்
நீள் நெடு பயணத்தில் ,
நித்தம் நித்தம் ஓருறக்கம்
நிகழ்வதுதான் ஏனோ ?
உள்ளங்கையில் அள்ளும்அளவும்
உடன்கொண்டு போவதில்லை ,
கொள்ளைகொண்டு பெருஞ்செல்வம்
குவிப்பதுதான் ஏனோ ?
கூற்றுவன் கயிறு வந்து
குரல்வளை நெருக்கும் ,
காற்றை விலைக்கு விற்று மானுடம்
பிழைப்பதுதான் ஏனோ ?
மாயாத மானிடர்
மண்ணிலில்லை ,தெரிந்தும்
ஓயாத ஆணவம்
ஒழிந்தபாடில்லை ஏனோ ?.